Tuesday, September 24, 2019

சிங்காரக்கண்ணன்



சிங்காரக் கண்ணா நீ சிறைநிறைந்த இருள்கிழிக்க
மங்காத சோதியென மாந்தருய்யப் பிறந்தனையோ !

கோகுலம் கொண்டாடும் பாலனாய்க் களித்தனையோ !
கோதகற்றி அறங்காக்கப் பரமனாய் நிறைந்தனையோ !

மலரளைந்த கைகளால் மாந்தர்தமைக் காத்தருள
மலைதனைச் சுமந்தவெழில் கோலமதோர் வியப்பன்றோ !

வெண்ணையுண்ட திருவாயில் அன்னை அயர்ந்துவிழ
மண்ணுண்டு அண்டமதைக் காட்டியதுன் மாயமன்றோ !

ஆயர்பாடி தன்னிலேசிறு பாலகனாய் நடனமாடி
பேயவள் முலையுண்டு சாய்த்ததுந்தன் திறனன்றோ !

மோர்ப்பானை தனையுருட்டி மதுரமாய்க் களித்துப்பின்
போர்க்களம் தனில்கீதை பகர்ந்ததுந்தன் கருணையன்றோ !

அள்ளியள்ளி அமுததனைப் பட்சிகட்கு ஈந்தசுரப்
புள்ளின்வாய் பிளந்தவண்ணம் பிரானேவுன் பெருமையன்றோ !

மாலைசூடி யானையாடி மழலைமொழி உரையாடி
காளையென ருக்மணிகைப் பிடித்ததுந்தன் காதலன்றோ !

சுவைமிகுந்த பழங்கள்பல பேரன்பால் பிறர்க்கீந்து
அவைநடுவே அரசிமானம் காத்ததுமுன் கனிவன்றோ !

சிங்காரக் கண்ணா நீ சிறைநிறைந்த இருள்கிழிக்க
மங்காத சோதியென மாந்தருய்யப் பிறந்தனையோ !

Friday, September 20, 2019

அர்ப்பணம்



மாதவன் இசைத்திடும் குழலோசை காற்றில்வர
கோதற்ற கறவைகள் பண்கேட்டு பாற்சொரிய
மாதர்கள் தயிராக்கிக் கடைந்தநல் வெண்ணையை
யாதவன் அளவிலா அன்பினால் கைக்கொண்டான் !

கானகம் தன்னிலே உயர்ந்தோங்கி  வளர்ந்திடும்
வேணுவும் உள்வரும் தென்றலைத் தேக்காது
தேனினும் இனிப்பதாய் தேவரும் விழைவதாய்
கானமதைப் பொழிந்திட வேங்குழல் ஏந்தினான் ! 

நீலவண்ண மாயவனின் வனப்பிலே மயக்கமுற்று
கோலமயில் தானுமதை மழைமேகம் எனக்கொண்டு
பீலிவிரித் தாடியன்பால் தோகையைப் பரிசளிக்க
ஆலிலைக் கண்ணனவன் அகமுவந்து முடிதரித்தான் !

கந்தம்கமழ் சந்தனம் தன்னையே தேய்த்ததி
சுந்தரனாம் கோவிந்தன் தனக்களிக்க குன்றேந்தி
இந்திரன் செருக்கழித்த இனியவன் மனமுவந்து
மந்திரங்கள் முழங்க திருமேனி தரித்தனனே! 

அளவற்ற அன்பினால் அவனருள்வதை அர்ப்பணித்து
வளங்களைத் தேக்காமல் வாழ்வெலாம் பிறர்க்கீந்து
உளமுவந்து உகப்பதை உத்தமனுக்கே உரித்தாக்கி
வளம்பெருக அகம்தேய்ந்தே அவன்பணி செய்திடுவோம் !


Saturday, September 14, 2019

திருப்பள்ளியெழுச்சி




ஒருகண் செங்கதிராய் மறுகண் முழுமதியாய்
இருகண் கொண்டெமைக் காத்தருள் கண்ணனே
அருமறை தொழுதிடும் அற்புதமாம் வடிவழகைப்
பருகவே வந்துநின்றோம் பள்ளியெழுந் தருளாயோ !

அஞ்சுக மொழிபயிலும் ஆய்ச்சியர் அன்புடனே
கொஞ்சிநிதம் களித்திடும் கோவிந்தா வெண்ணையளை
பிஞ்சுவிரல் கிரியேந்த பேய்மழை தடுத்தவர்க்கு
அஞ்சேலென் றருளியவா அறிதுயில் களைந்தெழுவாய் !

குழல்பொழியும் இசைகேட்டு கறவைகள் பால்சொரிய
பழகிடும் அன்பருந்தன் பரிவுணர்ந்து அகமகிழ
அழகுமிளிர் ஆய்ச்சியர்தம் அகத்துறை நாயகனே
எழில்கொஞ்சும் வடிவழகா எழுந்தெமைக் கடைக்கணியே !

ஓதிடும் மாணவர்கள் ஒழுக்கம் கைக்கொண்டு
ஆதவன் எழும்முன்னே துயிலுதிர்த்து நீராடி
பேதமை வென்றுநற் பேறுகள் பெற்றிடவே
ஏதுவாய் உனைச்சொல்ல மாதவா எழுந்திடுவாய் !

Wednesday, September 11, 2019

ஓணம்




அலைமகள் அகத்துளே மறைந்த வாமனனாய்
ஆழிசூழ் பேருலகில் பாலனாய் அவதரித்து 
இடத்தில் கமண்டலமும் வலத்தில் குடையுமாய்
ஈத்துவக்கும் மாபலியிடம் மூன்றடி மண்கேட்டு
உலகளந்து வானளந்து மூன்றாம் திருவடிபதிய
ஊக்கமிகு மன்னவனின் சிரமேற் கால்பதித்து
எண்திசையும் ஆர்ப்பரிக்க பாதாளம் காட்டியபின்
ஏற்றமிகு நிலையளித்து வரம்தந்த பரமனருளால்
ஐந்திலே இரவியுறை ஆவணியாம் திங்களதில்
ஒற்றுமையாய் ஊர்கூடி கோமகனை வரவேற்க
ஓணமெனும் பண்டிகை வந்ததம்மா!  உருபசிக்கு
ஔடதமாம் நல்விருந்து தந்ததம்மா! கலையழகால் 
ஊரெலாம் பூக்கோலம் கண்டதம்மா! இன்பநிலை
பாரெலாம் பரவியே நிறைந்ததம்மா !





Thursday, September 5, 2019

பேரருளாளன்


இச்சையாலே இப்புவியில் பிறந்துழன்று தத்தளித்து
சர்ச்சையுளே அகப்பட்டென் செய்வதென்று அறிகிலாது
உச்சநிலை மருட்சியெனும் இருட்குகையில் தவிக்குங்கால்
கச்சிநகர் அருளாளர் கழலிணையே ஒளிவிளக்காம் !

ஓடிநிதம் அலைந்தழிந்து ஓய்ச்சலுறும் வேளையிலே
நாடிநாம் அடைந்திட்ட பொருளெதுவும் நமதில்லை!
பாடித்துதி பலசெய்தவன் பதமலர்கள் பணிந்திட்டால்
தேடிவந்து முத்திதருவ தத்தியூரான் அருட்கரமாம் !

ஊழ்வினை தொடர்ந்திட வந்துதித்தோம் இவ்வுலகில்
பாழ்மனம் செலுத்திடும் வகைசென்று வழிதொலைத்து
சூழ்கலியின் தாண்டவத்தால் தளர்வுறும் தருணமதில்
வாழ்வளிக்க வல்லதுவோ வரதன்கடைக் கண்மலரே!

உதித்திடும் ஐயமெலாம் விரைந்தொழிந்து ஞானம்பெற
எதிராஜர் விடுத்தவம்மூ வினாக்கட்கும் நம்பிகள்வழி
பதிலீந்து வைணவநெறி வாழ்விப்பதும் கச்சிநகர்
பதிவாழும்  அருளாளன் அமுதாமென்று அறிவீரே!

அருந்தவம் செய்முனியும் மறையோது வேதியரும்
திரும்பவும் பிறவிவேண்டா திருவடியார் திரளதுவும்
விரும்பியே தொழுதிட-அவர் வேட்கை தணிப்பது நம்
பெருந்தேவி நாயகனின் பேரருள் மழையாமே !

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...