Tuesday, September 24, 2019

சிங்காரக்கண்ணன்



சிங்காரக் கண்ணா நீ சிறைநிறைந்த இருள்கிழிக்க
மங்காத சோதியென மாந்தருய்யப் பிறந்தனையோ !

கோகுலம் கொண்டாடும் பாலனாய்க் களித்தனையோ !
கோதகற்றி அறங்காக்கப் பரமனாய் நிறைந்தனையோ !

மலரளைந்த கைகளால் மாந்தர்தமைக் காத்தருள
மலைதனைச் சுமந்தவெழில் கோலமதோர் வியப்பன்றோ !

வெண்ணையுண்ட திருவாயில் அன்னை அயர்ந்துவிழ
மண்ணுண்டு அண்டமதைக் காட்டியதுன் மாயமன்றோ !

ஆயர்பாடி தன்னிலேசிறு பாலகனாய் நடனமாடி
பேயவள் முலையுண்டு சாய்த்ததுந்தன் திறனன்றோ !

மோர்ப்பானை தனையுருட்டி மதுரமாய்க் களித்துப்பின்
போர்க்களம் தனில்கீதை பகர்ந்ததுந்தன் கருணையன்றோ !

அள்ளியள்ளி அமுததனைப் பட்சிகட்கு ஈந்தசுரப்
புள்ளின்வாய் பிளந்தவண்ணம் பிரானேவுன் பெருமையன்றோ !

மாலைசூடி யானையாடி மழலைமொழி உரையாடி
காளையென ருக்மணிகைப் பிடித்ததுந்தன் காதலன்றோ !

சுவைமிகுந்த பழங்கள்பல பேரன்பால் பிறர்க்கீந்து
அவைநடுவே அரசிமானம் காத்ததுமுன் கனிவன்றோ !

சிங்காரக் கண்ணா நீ சிறைநிறைந்த இருள்கிழிக்க
மங்காத சோதியென மாந்தருய்யப் பிறந்தனையோ !

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...