அலைமகள் அகத்துளே மறைந்த வாமனனாய்
ஆழிசூழ் பேருலகில் பாலனாய் அவதரித்து
இடத்தில் கமண்டலமும் வலத்தில் குடையுமாய்
ஈத்துவக்கும் மாபலியிடம் மூன்றடி மண்கேட்டு
உலகளந்து வானளந்து மூன்றாம் திருவடிபதிய
ஊக்கமிகு மன்னவனின் சிரமேற் கால்பதித்து
எண்திசையும் ஆர்ப்பரிக்க பாதாளம் காட்டியபின்
ஏற்றமிகு நிலையளித்து வரம்தந்த பரமனருளால்
ஐந்திலே இரவியுறை ஆவணியாம் திங்களதில்
ஒற்றுமையாய் ஊர்கூடி கோமகனை வரவேற்க
ஓணமெனும் பண்டிகை வந்ததம்மா! உருபசிக்கு
ஔடதமாம் நல்விருந்து தந்ததம்மா! கலையழகால்
ஊரெலாம் பூக்கோலம் கண்டதம்மா! இன்பநிலை
பாரெலாம் பரவியே நிறைந்ததம்மா !

No comments:
Post a Comment