Wednesday, July 31, 2019

விதை


உலகெலாம் படர்ந்திடும் பேராற்றல் உந்தனுளும்
உண்டதை யறிவாய்! மெய்யுணர்ந்து தெளிவாய்!
உள்ளிருக்கும் விதைநீ மயக்கமெனும் கூட்டதனை
உடைத்தே வெளிப்படுவாய் உயிர்த்தே உயர்வுறுவாய்!

மேல்வரும் தடைகளை முறித்துக் கிளம்பிடுவாய்!
மெய்யொளி தனையேற்று மென்தளிர் விரித்திடுவாய்!
அன்பெனும் தென்றலின் அணைப்பில் தழைத்திடுவாய்!
பண்பெனும் நீரருந்தி பாங்குடன் வளர்ந்திடுவாய்!

புவித்தாய் மடிதவழும் தளிர்மழலைப் பருவம்பின்
கவின்மிகு பூப்பொழியும் வளரிளமைப் பருவமுடன்
கனிதந்து நிழலளிக்கும் இடைப்பருவம் தொடரும்
தனித்துவமாய் விதையீனும் அறிவுமுதிர் பருவம் !

சிறுவிதை தாவரமாய் விரிந்திடுமிவ் வித்தையை
அறிந்துன் மனங்குவித்துத் தெளிந்து தேர்ந்திடுவாய்!
அகத்துள்ள ஆற்றலை உணர்ந்திடுவாய்!  தடைகளைத்
தகர்த்தியே நற்பண்பால் வெற்றிவாகை சூடிடுவாய்!




Saturday, July 27, 2019

நீர்த்துளி




தான்தவழும் தளத்தோடு சற்றேனும் ஒட்டுணராது
தன்தனித் தன்மையால் உருண்டோடிக் களித்தாங்கே
வானின்று வருமொளியைப் பற்றாமல் எதிரொளிக்கும்
சாமானிய நீர்த்துளியும் வைரமென ஒளிர்வதுபோல்
தாமிருக்கும் நிலையோடு ஒன்றாமல் எக்கணமும்
ஊனுற்ற உடல்கடந்த ஆன்மஞானம் தனைவிழைந்து
வரும்பொருள் பற்றாமல் உரியவர்க்கு வழங்குமன்பர்
அரும்பொருள் ஆசியால் வெற்றிபெற் றொளிர்ந்திடுவர் !


Tuesday, July 23, 2019

பெண்

மண்ணில் பெண்ணாய்ப் பிறந்தவளே உனது
கண்ணில் புதுயுகம் காணுகிறேன் வாழ்வில்
வண்ணம் கூட்டிடும் தேவதையே உந்தன்
எண்ணத்தின் மேன்மையே உனதென் றரிவாய் !

கல்வியைக் களிப்புடன் கற்றுணர்வாய் மேலும்
பல்கலையும் பயின்று பொலிவுறுவாய் பேசும்
சொல்லழகால் களிப்புறும் மாந்தரெலாம் வாழும்
இல்லழகும் கண்டு வியக்கச் செய்வாய் !

தாய்தந்தை பேணுங்கடமை செய்வாய் அன்பால்
வாய்க்கும் கணவன்கை வலிமைகூட்டுவாய் பெற்ற
சேய்க்ட்கும் அன்னையாய் பண்பூட்டுவாய் உன்னை
நோயெதுவும் அண்டாமலுன் நலமும் நாடுவாய் !

எந்திரங்கள் கற்றுத் தேர்ந்திடுவாய் பிணிதீரும்
தந்திரங்கள் பற்பலவும் பயின்றிடுவாய் நாடுவக்கும்
மந்திரியும்  தானாகி  ஒளிர்ந்திடுவாய் வனப்பூட்டும்
சந்திரனைக் கண்டறியக் கலமும் இயக்குவாய் !

பாரதி கண்டநற் புதுமைப்பெண்ணாய் இல்வாழ்வில்
சாரதி யாகவும்நீ வழிநடத்துவாய் காத்திடும்
காரிருள் வண்ணனின் கருணையினால் இயங்கும்
பார்புகழ் வெற்றியை உனதாக்குவாய் !

Monday, July 22, 2019

சந்த்ரயான்




      நிலத்தினின்று நிலவுகண்டு வியந்தோம் அன்று;
நிலவிற்கே கலமனுப்பி உயர்ந்தோம் இன்று;
நினைத்த பெருஞ்செயல் நிறைவேறக் கண்டு
   நிலமெலாம் ஆர்ப்பரிக்குது “பாரதம் பார்” என்று!


சந்திரயான் 2 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகப்பெரும் சாதனை! இச்சாதனை உலகுக்கு நமது திறமையை எடுத்துக் காட்டியது எனலாம்! இதில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அவர்களுக்கு உதவிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் நம் வாழ்த்துக்களையும் நன்றியையும் உரித்தாக்குவோம். ஜெய் ஹிந்த்!

Saturday, July 20, 2019

விஸ்வரூபம்



கண்பார்க்கும் காட்சிநீ கண்டுணரும் விழியும்நீ
பண்கேட்கும் செவியும்நீ செவியறியும் ஓசைநீ
மண்தாங்கும் தாவரம்நீ தாங்கிநிற்கும் புவியும்நீ
எண்ணும் எழுத்தும்நீ எங்கும்நிறை வெளியும்நீ
விண்வளர் விசையும்நீ விரிந்தஎண் திசையும்நீ
வண்டாடும் மலர்மார்பா விரிசடைக் குழலினாய்
தண்டாமரை உதித்தோய் தகுதியில் நிகரில்லாய்
அண்டங்கள் அனைத்தும்நீ ஆதாரமும் நீதானே


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

அத்திவரதர்


நாடியே துதித்துநம் அன்பெனும் மலர்சாற்றி
தேடியே சென்றுநல் தேமதுரத் தமிழ்பாட
கேடிலா வாழ்வெனும் வரமருளும் அத்தியூரான்
ஈடிலாக் கருணைப்பே ரருளாளன் தானே!

அலைகடல் துயின்றவன் அருட்காட்சி காணத்தாம்
அலையெனவே திரளடியார் அன்புகண்டு வந்தவர்க்கு
அலையலையாய் வருந்துயர் அகற்றிடும் வரதனவன்
அலைமகள் அகத்துரைபே ரருளாளன் தானே!

பத்தியுடன் பதம்பணிய புத்தியிலே நிறைவான்
மத்தியிலே வந்தமிழ்த்தும் பற்றுகளைக் களைவான்
சித்தமெலாம் அவனென்றே சீரடியைப் பற்றிடிட
முத்தியருள் அமலன்பே ரருளாளன் தானே!

கரியதனுக் கருள்புரிய திகிரியேந்தி வந்தவன்
அருந்துணைச் சீதைமீட்க சிலையேந்தி வென்றவன்
உரிமையாய் அன்பருய்ய அபயக்கரம் தரித்தவன்
கருமணியாய் நிற்கும்பே ரருளாளன் தானே!

அரும்பும் மழலைக்கு அன்னையாகி அணைப்பவன் 
குரும்புச் சிறுவர்க்கு தந்தையாய்வழி நடத்துவான்
விரும்பித் தாள்சேரும் அடியவரை ஆட்கொண்டு
பெரும்வெற்றி நல்கும்பே ரருளாளன் தானே !

Friday, July 19, 2019

தவத்தருணம்



உம்பர்கோ னகந்தை ஒழிந்தவத் தருணம் 
அம்புவியும் வானகமும் வியந்தவத் தருணம்
நம்பமறுப் போரும் தொழுதவத் தருணம்
அன்பால் விரல்வரை பிடித்தவத் தருணமே !


அகரமுதலி

அசோதை வருடிடும் சுருள்கரும் குழல்களும்
ஆய்ச்சியர் கொஞ்சிடும் அதிசுந்தர வதனமும்
இன்னிசை ஊற்றெடுக்கும் செவ்வாய் அதரமும் 
ஈர்த்தே ஆட்கொள்ளும் குவளையன்ன விழிகளும்
உம்பர்கோன் வியக்கக் குன்றேந்தும் சிறுவிரலும்
ஊழியில் ஆலிலை மேலெழுந்த திருவடிவும்
எதிர்வரு தடைநீக்க விறைந்திடும் கரங்களும்
ஏங்குவோர் குறைநீக்கும் ஏற்றமிகு செவிகளும்
ஐயமின்றி சரணடைவோர்க் கருளும் தாளிணையும்
ஒப்பிலா அழகனைத்தும் தெவிட்டாத தெள்ளமுதாம்
ஓய்வறியா மாமணியே வரும்பிணி தகர்த்திடும் 
ஔடதம்  உமதடிகள் அவையென்றும் எமதிலக்காம் !


வான்மழை


புவித்தாய் பூரிக்க வானுதிர்த்த நீர்த்துளி
தவிப்போர் தாகம் தீர்த்திடும் அருந்துளி 
பயிர்கள் தழைக்க வரந்தரும் பெருந்துளி
உயிர்கள் உய்யப் பொழியும் மழைத்துளி !



நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...