விண்ணளந்தோம் பரந்திடும் கடலெங்கும் கப்பலோட்டி
மண்ணளந்தோம் கணித்திடும் திறங்கள் பலபயின்றே
எண்ணளந்தோம் புவித்தாய் மடிமீது விளையாடியே
பொன்னளந்தோம் தவத்திரு பாரத மண்ணிலே!
வந்தார் வியாபாரம் செய்திடவே வந்திங்கே
தந்தார் வகைவகை ஆடம்பரப் பொருளெல்லாம்
நொந்தார் நமதகத்தே நாம்கொண்ட பெருமைதனை
நந்தா விளக்காம்நம் கலாசாரம் கடிந்தனரே!
புலன்களைத் தாக்கிப்பெரும் புண்ணாக உருவாக்கி
மருந்திடும் முகமாய் மதியழித்த மூர்க்கர்கள்
புசித்திடும் சோறுதனை புலாலுக்காக மாற்றி
வசம்செய்து போதையினால் வஞ்சித்த கயவர்கள்!
கள்ளர்கள் கடந்தபின்னும் கண்மூடிக் கருத்தழிந்து
உள்ளத்தில் ஊக்கமதை உறங்கவிட்டு ஆண்டாண்டாய்
பள்ளத்தில் கிடந்துநிதம் பரிதவிக்கும் பாமரரே!
தெள்ளத் தெளிந்திடுக! தூக்கம் கலைந்திடுக!
